ஜன. 25-ல் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்: அதிமுக

அதிமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணி சார்பில் வருகிற 25 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில்  ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி பங்கேற்கிறார்.

கோவை புறநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார். வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version