திமுக ஆட்சியில் அரங்கேறும் படுகொலைகள்… சரிந்து குலைந்த சட்டம் – ஒழுங்கு!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் மாநிலத்தில் ஆங்காங்கே பல கொடூர கொலைச்சம்பவங்கள் அரங்கேறி ரத்தத்தை உறைய வைக்கிறது…

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் பல கொடூர கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முன்விரோதத்தால் கொலை, கூலிப்படையை ஏவி கொலை என்று சட்ட ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. 10 ஆண்டுகள் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, கடந்த 3 மாதங்களாக கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

அப்படித்தான், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோமங்கலத்தை அடுத்த எருமையூர் பகுதியில், நள்ளிரவில் சாலையோரம் ஒருவரின் வெட்டப்பட்ட தலை மட்டும் தனியே கிடைத்தது. அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர், காவல்துறையில் புகார் அளிக்க, விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடந்த படுகொலைக்கு, பழிக்குப்பழி வாங்க துண்டிக்கப்பட்ட தலைதான் அது என்பது தெரியவந்தது. அதனைக் கண்டறிய காவல்துறையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த கோபாலசமுத்திரம் குளத்தின் கரையில், தலை இல்லாத உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. விவசாயி ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவமும், முன்னர் நடந்த கொலைக்குப் பழிவாங்க, கூலிப்படையினர் செய்த கோரச்செயல் என்று கூறப்படுகிறது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சொத்து தகாராறு காரணமாக, உறவினர்களுக்குள் நிகழ்ந்த படுகொலை, திருவள்ளூர் மாவட்டம் சுண்ணாம்புகுளத்தில், மர்ம நபர்களால் கூலித் தொழிலாளி தலை நசுங்கிய நிலையில் மீட்கப்பட்ட படுகொலை என்று பட்டியல் நீள்கின்றன.

வாணியம்பாடியில், சமூக ஆர்வலரைக் கூலிப்படையினர் சாலையில் வைத்து சரமாரியாக வெட்டிய சம்பவமும் இதில் அடங்கும். மக்களின் அமைதி நிலையைக் குலைக்கும் இதுபோன்ற கொடூர சம்பவங்களால், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து கிடக்க, இவற்றைத் திமுக அரசு திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்…….

 

Exit mobile version