தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமாருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டின் தங்கவேலு, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 1.88 மீட்டர் உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

உயரம் தாண்டுதலில் இரண்டு பதக்கங்களை பெற்று வாகை சூடிய இந்திய வீரர்களான மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இந்தநிலையில், அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மாரியப்பன் தங்கவேலுவுக்கு கிடைத்துள்ளது.

Exit mobile version