மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்தாவது விசாரிக்கலாம் : உயர்நீதிமன்றம்

மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2004, 2007ல் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்லின் அதிவிரைவு தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் மீது, குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், நம்பிக்கை மோசடி, ஊழல் முறைகேடு ஆகிய பிரிவின் கீழ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இதையடுத்து குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என மாறன் சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இதனை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதனிடையே மாறன் சகோதரர்கள், ஏதாவது ஒரு காரணம் கூறி வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுத்துவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை, சிபிஐ குற்றச்சாட்டு அடிப்படையில் மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் வழக்கை தாமதித்தால் மாறன் சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தாவது விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாறன் சகோதரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version