நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவர் கைது

டெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலை அடுத்து பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்பவர்களைச் சோதிக்கும் பணியில் காவல்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து உள்ளே நுழைய முயன்ற மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கத்தியுடன் வந்த நபரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், சாகர் இன்சா என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version