உத்தரபிரதேசத்தில் 22 குழந்தைகளை கடத்தி வீட்டில் சிறை வைத்த நபர்

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அருகே 22 குழந்தைகளை கடத்தி வீட்டில் சிறை வைத்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்ததுடன், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

ஃபரூக்காபாத் அடுத்த கத்தாரியா பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் பாதம். பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நிலையில், சுபாஷூக்கு அரசு அதிகாரிகள் வீடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது கிராமத்தை சேர்ந்த 23 குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று வீட்டில் சிறைவைத்தார். ஒரு குழந்தையை மட்டும் விடுவித்த சுபாஷ், பிற குழந்தைகளை விடுவிக்க மறுத்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மீது சுபாஷ் தாக்குதல் நடத்தியதால், அவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் சிறைவைக்கப்பட்ட 22 குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். சுபாஷின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version