மாலத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 வது முறையாக பிரதரமராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர், இப்ராஹிம் சோலி வரவேற்றார். அப்போது அந்நாட்டின் பாரம்பரிய நடனத்தை பிரதமர் மோடி சிறிது நேரம் பார்வையிட்டார். இதன் பின்னர், அந்நாட்டின் முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் ஷோலியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மேலும் அந்நாட்டின் துணை அதிபர் ஃபைசல் நசீம், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நசீத் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான, நிஷான் இசூதீன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது. மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை இலங்கை செல்ல உள்ளார்.

Exit mobile version