நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைதிரிபால சிறிசேனா அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அறிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைதிரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஆளும் கூட்டணி அரசுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்குவதாக அதிபர் மைதிரிபால சிறிசேனா அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலையே, இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டி, ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு போதுமான ஆதரவு இல்லை என கூறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை நவம்பர் 16ம் தேதிவரை தற்காலிகமாக முடக்குவதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது என்றும், பிரதமராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version