மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைத்த தருமபுர ஆதீனம்

மதுரை ஆதீனத்திற்கு அடுத்த பீடாதிபதி தாம் தான் என நித்தியானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில், மடத்தில் உள்ள அருணகிரிநாதர் அறைக்கு இரவோடு இரவாக தருமபுர ஆதீனம் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், அண்மையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால், நேற்று தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனத்தை சந்தித்தார். பின்னர், மதுரை ஆதீன மடத்துக்குச் சென்று, சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய அறையைப் பூட்டி, சீல் வைத்தார்.

நேற்று முன்தினம், மதுரை ஆதீனத்தின் அடுத்த பீடாதிபதி என்று நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டதன் எதிரோலியாகவே இந்த சீல் வைப்பு நிகழ்ந்ததாக பேசப்படுகிறது. இந்த நிலையில், வழக்கமான நடைமுறைப்படியின் படியே சீல் வைக்கப்பட்டதாக தருமபுர ஆதீனம் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவமனையில், அருணகிரிநாதர் சொன்ன முறைப்படியே பூஜைகள் நடத்தப்படும் என்றும் தருமபுர ஆதீன தரப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version