காதல் திருமணம் செய்த மகளின் முகத்தில் அமிலம் வீசிய தந்தை

திருவள்ளூர் அருகே, காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் அமிலம் வீசிய தந்தை, மகளை கடத்திச் சென்றதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார், சென்னையை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை, இதற்கு மறுப்பு தெரிவிக்க, இருவரும் கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டதுடன், வேப்பம்பட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தீபிகாவை பார்க்கச் சென்ற அவரது தந்தை பாலகுமார், தாய்க்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பாலகுமார், தனது அடியாட்களை அழைத்து, கையில் வைத்திருந்த அமிலம் கலந்த பவுடரை அவரது முகத்தில் பூச முயன்றுள்ளார்.

இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் மற்றும் மற்றொரு மருமகள் முகத்திலும் அமிலத்தை பூசியதோடு, தீபிகாவின் முகத்திலும் அமிலத்தை பூசி அவரை காரில் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து தீபிகாவின் மாமனார் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்த பாலகுமார், வேப்பம்பட்டு பிரதான சாலையில் தீபிகாவை இறக்கிவிட்டு, தப்பிச் சென்றார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், காவல்துறையில் பணியாற்றி விருப்பப் ஓய்வு பெற்ற பாலகுமாரை தேடி வருகின்றனர்.

Exit mobile version