ப.சிதம்பரம் வெற்றி பெற்றது எப்படி என்பது ஆண்டவனுக்கே தெரியும்-ராஜகண்ணப்பன்

திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில், திமுகவின் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பெயரளவுக்கு கூட்டணி அமைத்திருந்தாலும், இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே இணக்கம் இல்லாமல் உள்ளது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திமுகவை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராஜகண்ணப்பன், கடந்த 2009 மக்களவை தேர்தலில் ப. சிதம்பரம் வென்றது எப்படி என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும் என்று கிண்டலாக கூறினார். இந்த தேர்தலில் வெற்றி பெற கார்த்தி சிதம்பரம் போன்றோர் பணத்தை செலவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சியின் வெற்றி குறித்த ராஜகண்ணப்பனின் பேச்சை திமுகவினர் கைத்தட்டி ரசித்தனர். இதேபோல், பரமக்குடி இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு உட்கட்சி பூசல்தான் காரணம் என்பதையும் பொது மேடையில் ராஜகண்ணப்பன் ஒப்புக்கொண்டார்.

Exit mobile version