அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையை தற்காலிக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஸ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி மக்களவை கூட்டம் தொடங்கவுள்ளது.

இந்தநிலையில், அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்து வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று, மாநிலங்களவை சபாநாயகரும், குடியரசுத் துணை தலைவருமான வெங்கையா நாயுடுவும் அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

Exit mobile version