மறுஅறிவிப்பு வரும் வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ தேவைகள் மற்றும், விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு இரவு நேர ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் காவலர்கள், இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் போது அடையாள அட்டை எடுத்துச் செல்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் இரவு நேரங்களில் அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படலாம் என தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அத்தியாவசிய சரக்கு வாகனங்களுக்கு தடையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version