வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ; நடவடிக்கை எடுக்காத போலீசார்

கரூர் அருகே வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல்நிலையம் முன் ஊராட்சி உறுப்பினரின் கணவர் மற்றும் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடவூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் செல்வராஜ். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி தாவிய இவர், யார் ஆட்சி நடக்கிறதோ, அந்த கட்சிக்கு மாறிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

இவரது ஆதரவாளரான ஒப்பந்ததாரர் தமிழ் பொன்னுசாமி என்பவர், கடந்த 19ஆம் தேதி, கீழ்சேவாப்பூரில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக சாலைப் பணிக்கு பூமி பூஜை போட முயன்றுள்ளார்.

இதனை, ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர் சசிகலா மற்றும் அவரது கணவர் அருள்முருகன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் பொன்னுசாமி, அரசுப் பள்ளி ஆசிரியரான பாலமுத்துவுடன் சேர்ந்து, சசிகலாவின் வீட்டுக்கு இரவில் சென்று கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, அருள்முருகனும் அப்பகுதியினரும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version