பெண்களுக்கு பல நலத்திட்டங்களை ஏற்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகத்தில் இதுவரை பிறந்த, இனி பிறக்கும் ஒவ்வொரு பெண்குழந்தையும் பயனடையும் வகையில், திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய முன்னோடித் திட்டங்களில், சிறந்த 10 திட்டங்களை அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்…

முதலாவதாக, பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் :

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், 1992-ம் ஆண்டு, பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண்குழந்தையின் பெயரில், வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இது, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கு பேருதவியாக இருக்கும். லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

இரண்டாவதாக, தொட்டில் குழந்தை திட்டம் :

பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 1992-ம் ஆண்டில் தொடங்கியதுதான், தொட்டில் குழந்தை திட்டம். இந்தத் திட்டத்தினால், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர், அதை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது. இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

மூன்றாவதாக, சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம்:

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் முதல் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகள்வரை, பலதரப்பட்ட பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் பெண்களின் சுகாதாரத்திற்கான சிறந்த முன்னுதாரணத் திட்டமாக இத்திட்டம் போற்றப்படுகிறது.

நான்காவதாக, பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் :

உடல் எடைக்கும், உடல் நலனுக்கும் இடையே உள்ள தொடர்பை மனதில் கொண்டு, பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம், குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடைகள் கண்காணிக்கப்பட்டு, எடை குறைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நலம் காக்கப்படுகிறது.

ஐந்தாவதாக, மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் :

ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள், சுயமாக முன்னேறி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, ’மகளிர் சுய உதவிக் குழுத்திட்ட’த்தின் மூலம் கடனுதவி பெற வழி வகுத்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தத் திட்டம் இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

அறாவதாக, அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் திட்டம்:

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும், அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்களைக் கொண்ட ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’ என்ற புதிய திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது . ஏழை, எளிய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், நலமும் வளமும் பெற்று வளர, இத்திட்டம் உதவி வருகிறது.

ஏழாவதாக, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திட்டம்:

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற முதல் பதவிக் காலத்தில்தான், பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும், பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர், 2003ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களை மட்டுமே கொண்ட சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது.

எட்டவதாக, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் :

கைக்குழந்தைகளுடன் பெண்கள் வெளியில் செல்வதே பெரும்பாடானது. அதிலும் பாலூட்டும் தாய்மார்கள், பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாமல் தவிப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார், தாயுள்ளம் கொண்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

ஒன்பதாவதாக, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் :

மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தருவதுதான் ’அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்’. இதன் மூலம், மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க, 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கிய ’மகப்பேறு சஞ்சீவி’, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், கருவுற்ற பெண்களின் ஆரோக்கியமும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

பத்தாவதாக, பெண்களுக்கான விருதுத் திட்டங்கள் :

வீர, தீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய, ‘கல்பனா சாவ்லா’ விருது, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு, 1 லட்சம் ரூபாயோடு, 8 கிராம் தங்கப் பதக்கமும் அடங்கிய ‘அவ்வையார் விருது’ ஆகியவற்றையும் அறிவித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த விருதுகள், பெண்களின் திறனை உலகம் அறிய, வகை செய்கின்றன.

ஜெயலலிதா மறைந்தாலும், அவரது சீரிய திட்டங்களால், தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார்…

Exit mobile version