எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி, நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தனர்.

இவர்களில் 7 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள், 6 பேர் புதுக்கோட்டை பகுதியினர், நாகை பகுதியைச் சேர்ந்தவர்கள் 4 பேர் அடங்குவர். இவர்களிடம் விசாரணை செய்த இலங்கை கடற்படையினர், வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்க உள்ளனர்.

ஏற்கனவே 16 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற இரண்டே நாட்களில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version