5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்ற கொல்கத்தா அணி

அகமதாபாத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினாலும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கெயில் டக் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் கிறிஸ் ஜோர்டன் 30 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

சுப்மன் கில், நிதிஷ் ராணா, சுனில் நரேன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த கொல்கத்தா அணியை பொறுப்புடன் விளையாடி கேப்டன் மார்கன், திரிபாதி ஆகியோர் மீட்டனர்.

திரிபாதி 41 ரன்கள் சேர்க்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற கேப்டன் மார்கன் 47 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணி நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது.

Exit mobile version