குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கு: குற்றவாளியை தூக்கிலிட இடைக்கால தடை

கோவையில் குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து மனோகரனை டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடும் படி, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல், தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மனோகரனை தூக்கிலிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version