"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

கரூரில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து குறிப்பிடாததால், போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தியும், பாலியல் தொல்லை அளித்த நபர் குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், மாணவி பயின்ற பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர், நேற்று மாலை, திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தற்கொலைக்கு முன் ஆசிரியர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், “நான் தவறு செய்யவில்லை” என்றும், “என்னை மாணவர்கள் தவறாக நினைப்பது அவமானமாக இருக்கிறது” எனவும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன்; அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்” என ஆசிரியர் உருக்கமாக எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version