தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு வித்திட்டவர் கருணாநிதி

மிசாவில் சிறைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் என்று பொய்க்கதை புனையப்பட்டு இன்றோடு, 43 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கோயபல்ஸ் பிரச்சாரத்தைப் போல், திரும்ப திரும்பச் சொல்லி, மு.க.ஸ்டாலினின் அரசியலுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட, இந்த நாள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை…

1970-களில், இந்தியாவில் வாரிசு அரசியல் அங்கொன்றும்… இங்கொன்றுமாக இருந்தது. ஆனால், கருணாநிதிக்கு முன்பு வரை, தமிழகம் வாரிசு அரசியல் மோசடிக்குப் பழகவும் இல்லை; பாதிக்கப்படவும் இல்லை. அதை மாற்றி, தன் மகன் ஸ்டாலினை அரசியலில் இறக்கிவிட திட்டமிட்ட கருணாநிதி, தமிழகத்தில் வாரிசு அரசியல் என்ற மோசடிக்கு முதன்முதலில் பாதை போட்டார்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வைக் கைப்பற்றிய கருணாநிதி, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்பச் சொத்தாக மாற்றும் வேலையில் இறங்கினார். பணம் என்றால் தன் பாக்கெட்டுக்கு… பதவி என்றால் தன் மருமகன் மாறனுக்கு… என அப்போது செயல்பட்ட கருணாநிதி, தன் மருமகன் முரசொலி மாறனை கட்சிக்குள் கொண்டு வந்திருந்தார். அவருக்கு முக்கியப் பொறுப்புகளையும் கொடுத்திருந்தார். அதோடு, வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் தன் மகன் மு.க.ஸ்டாலினையும் உருப்படியாக்கத் துடித்துக் கொண்டிருந்தார். அதற்காகவே, திமுக-வில் இளைஞரணி என்று ஒரு அணியை உருவாக்கிய கருணாநிதி, அதன் தலைமைப் பொறுப்பை மு.க.ஸ்டாலினுக்குக் கொடுத்து அழகு பார்த்தார். ஆனாலும், சொல்லிக் கொள்ளும்படி மு.க.ஸ்டாலின் அதில் முத்திரை பதிக்கவில்லை. அந்த நேரத்தில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார். 1975-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நள்ளிரவுக்குப் பின், நடைமுறைக்கு வந்த நெருக்கடி நிலையை அடுத்து, கருணாநிதி அரசாங்கத்தின் ஊழல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

அன்றைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா, கருணாநிதியின் முறையற்ற ஆட்சி, வீராணம் திட்ட முறைகேடு, மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதியை ஊதாரித்தனமாக, கருணாநிதியின் அரசாங்கம் செலவு செய்தது, தனித் தமிழ்நாடு கோரிக்கையை மறைமுகமாக வலியுறுத்தியது என கருணாநிதியின் ஆட்சியின் அலங்கோலத்தைப் பட்டியலிட்டார். அதன் அடிப்படையில், 1976 ஜனவரி 31-ம் தேதி தி.மு.க ஆட்சிக் கலைக்கப்பட்டது.

மிசா சட்டத்தின் கீழ், கருணாநிதியின் ஊழலுக்குத் துணை போன தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். மிசா சட்டம் நடைமுறையில் இருந்த அந்த நேரத்தில், கொலை வழக்கு… கொள்ளை வழக்கு… பாலியல் வழக்கு… என எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் தங்களை மிசா கைதி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வது இன்றளவும் வழக்கமாக இருக்கிறது. “நானும் ஜெயிலுக்குப் போறேன்… நானும் ஜெயிலுக்குப் போறேன்…” என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்வதைப் போலத்தான் அது.

நிலைமை அப்படி இருந்த நேரத்தில், 1976-ம் பிப்ரவரி 1… அதாவது 43 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டது மிசாவில் அல்ல… வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். அதற்கு இப்போதும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவர் மிசாவில்தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஒரு ஆதாரம் கூட இப்போது வரை திமுக-விடம் இல்லை.

குறிப்பாக, இஸ்மாயில் கமிஷன் அறிக்கைதான், இன்றுவரை மிசா சட்ட கைது நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணமாக பார்க்கப்படுகிறது. அதில், மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் மொழி பெயர்த்த புத்தகத்திலும் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. சென்னை மத்திய சிறை குறிப்புகளிலும், மு.க.ஸ்டாலினின் மிசா கைது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. உண்மை இப்படி இருக்கும் நிலையில், ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பொய்யைச் சொல்லி, அதற்கு திரைக் கதை எழுதினார், சினிமா வசனகர்த்தா கருணாநிதி. அதைத்தான் தேய்ந்துபோன ரெக்கார்டு போல், மு.க.ஸ்டாலினின் அரசியல் தியாகமாக இப்போதுவரை, தி.மு.க-வால் உதாரணம் காட்டப்படுகிறது.

ஆனால், வரலாறு தெரிந்த முன்னாள் தி.மு.க-வினர், பச்சையப்பன் கல்லூரி டிரஸ்ட் தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் அடிதடி நடந்தது என்றும், அந்த வழக்கில்தான் ஸ்டாலின் கைதானார் என்றும், வேறுசில வழக்குதான் காரணம் என்றும் தகவல்களை அடுக்கிச் சொல்கின்றனர். அதை மறுப்பதற்கு தி.மு.க-விடமோ, மு.க.ஸ்டாலினிடமோ எந்த ஒரு ஆதாரம் கூட இல்லை. இப்படிப்பட்ட ஒரு மோசமான கட்டுக்கதைக்கு வித்திட்டது, 43 ஆண்டுகளுக்கு முன்பு… இன்றுபோல் வந்த ஒரு பிப்ரவரி 1-ம் தேதிதான்.

இது ஒருபுறம் இருக்க, அந்த நேரத்தில் சிறையில் மு.க.ஸ்டாலின் மீது விழுந்த அடிகளை எல்லாம் வாங்கியது, சென்னை மாநகர முன்னாள் மேயர் சிட்டிபாபு. அப்போது வாங்கிய அடியில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த சிட்டிபாபு, ஸ்டாலின் மேல் விழ இருந்த அடிகளை வாங்கியதில், சிறையிலேயே உயிர் நீத்தார். ஆனால், அவர் குடும்பத்தை கவனமாக ஓரம் கட்டும் வேலையைத்தான் கருணாநிதி குடும்பம் செய்தது. சிட்டிபாபுவின் மூத்த மகன் சேகர், தி.மு.க-வில் பலமுறை எம்.எல்.ஏ சீட் கேட்டு கேட்டு ஏமாந்துபோய், தி.மு.க-வே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். மற்றொரு மகன் சுகுமாரை, மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் வெறும் உதவியாளராக மட்டும் வைத்திருந்தார். அதன்பிறகு, அவரையும் கழற்றிவிட்டார். தற்போது சுகுமாரின் பணி அனுபவம், பதவி மூப்பு மற்றும் பணியின் நேர்த்தியைக் கருத்தில் கொண்ட, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைத்ததின் பேரில், சுகுமார் தற்போது சென்னை மாநகராட்சியின் வருவாய்த்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Exit mobile version