ஸ்டாலின் அறிக்கைக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அடிப்படை ஆதாரமற்றது என கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.சாண்ட் விலை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஸ்டாலின் இன்னும் அந்தக் காலத்தில்தான் இருக்கிறார் என்றுதான் அவரது அறிக்கையைப் படித்தால் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊழல் நடந்ததற்கு ஆதாரமிருந்தால், ஊழல் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் தெரிவித்திருக்கலாமே என்றும், அவ்வாறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், சமூக வலைத்தளங்களில் திரித்துக் கூறப்பட்ட செய்திகளை ஸ்டாலின் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உள்ளாட்சித்துறையில் தவறு ஏதும் செய்யாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டவர்களை மிரட்டும் தொனியில் பேசி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கும் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Exit mobile version