கமல்ஹாசனுக்கு, அரசை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான உதவியை செய்யாமல் பூட்டிய வீட்டுக்குள் இரும்புத் திரையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு, அரசை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் மாதத்திற்குள் மேம்பாலத்தை கட்டி முடிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று கூறினார். அப்போது, டாஸ்மாக் குறித்து தமிழக அரசை விமர்சித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசை விமர்சனம் செய்வதற்கு, எந்தவித தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version