கள்ளழகர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை!- உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா பாரவல் காரணமாக, கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. பின்னர், தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அதிகரிக்கும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவிழாவை குறைந்த பக்தர்களுடன் நடத்த அனுமதி தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அருண் போத்திராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நோய் தொற்றை காரணம் காட்டி திருவிழாவிற்கு தடை விதிப்பதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில், இது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுப்பினர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளனர்.

 

Exit mobile version