கஜா புயல் பாதிப்புகளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் –  பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து

கஜா புயல் பாதிப்புகளை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 30 கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அரசியலுக்காக யாரும் எதையும் சொல்லலாம் என்று தெரிவித்த அவர், கஜா புயலை சிறப்பான முறையில் தமிழகம் கையாண்டுள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளதை சுட்டிக் காட்டினார்.

பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கும் ஒரே நாளில் உதவி செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார். பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் முகாமிட்டு, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் நிவாரணம் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

 

Exit mobile version