ஈரானில் உளவுப் பார்த்த சிஐஏ கூலிப்படையினர் 17 பேர் கைது

அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.வுக்கு உளவுப்பார்த்து வந்த 17 பேர கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அவர்களில் சிலருக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதையடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும், தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்பட்டது. மேலும், தனது போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா குவித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனினும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் நசுங்கி போயுள்ளதாகவும், என்ன செய்வது என்பதே அந்நாட்டிற்கு தெரியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version