ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ அவரை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், கடந்த 5ம் தேதி அவரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், கடந்த 16ம் தேதி தனது பிறந்த நாளை சிறையில் கொண்டாடினார்.

இந்த நிலையில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால், நீதிபதியின் உத்தரவு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

Exit mobile version