ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் அக்டோபர் 16ந் தேதி கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை சார்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமின் வழங்கப்பட்டால், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை சார்பாக வாதம் செய்யப்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் கெய்ட், பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என்று கூறி சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version