சரத் பவார் பேட்டியால் மகாராஷ்டிரா அரசியலில் தொடரும் குழப்பம்

சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து சோனியா காந்தியுடன் பேச்சு நடத்தவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதால் மகராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் பவார், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு நடத்தவில்லை என அவர் தெரிவித்தார். சரத் பவார் – சோனியா காந்தி சந்திப்புக்கு பிறகு மகராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் இந்த பேச்சால் குழப்பம் நீடிக்கிறது.

Exit mobile version