தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை

பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அண்மையில் வெளியிட்டது.

இந்த டெண்டரில் தமிழ்நாடு அரசின் முந்தைய விதிமுறைகளை பின்பற்றவில்லை என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதிகளை மீறி, 6 நாட்களில் ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நீதிபதி வேலுமணி அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து அரசுத்தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, ஒப்பந்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். 

Exit mobile version