எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற “முதல் உலகக்கோப்பை போட்டி”

12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம்…

சர்வதேச ஒரு நாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 1975-ம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து தங்கள் நாட்டில் நடத்தியது. 60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் டெஸ்ட் போட்டி போன்று வெள்ளை நிற சீருடையுடன் விளையாடினார்கள்.

போட்டியில் கலந்து கொண்ட 8 அணிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன. இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை வென்றது. கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.

லீக் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்தன. அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிளைவ் லாயிட் 102 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவர்களில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 17 ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது. 5 வீரர்கள் ரன்-அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த கால கட்டத்தில் கிரிக்கெட்டின் வல்லரசாக வலம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி அனைவரும் எதிர்பார்த்தது போல் உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.

Exit mobile version