கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுக்கள் மீது இன்று விசாரணை

அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரின் மனுவுடன் சேர்த்து, மேலும், 5 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இதனை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 10 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து மேலும், 5 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அதில் தங்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் ஏற்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு, 5 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, நிலுவையில் உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, இந்த மனுவையும் விசாரிக்க கோருகிறார்.

Exit mobile version