சூறையாடப்பட்ட சுங்க கட்டண அறையில் புகுந்து பணம் திருட்டு

நுழைவு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களை தாக்கிய விவகாரத்தில் சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் புகுந்து மர்மநபர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்திலுள்ள சுங்கச்சாவடியில் இதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர சலுகைக் கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் திடீரென வாடகை வாகனங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், தனிநபர் வாகனங்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஓட்டுனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் செங்குன்றத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஓட்டுனர் உள்ளிட்ட 3பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனை சாதகமாக்கிக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், சுங்க கட்டணம் வசூலிக்கும் அறைக்குள் புகுந்து, அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து சோழவரம் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version