உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பழித் தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அண்மை காலங்களில் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆயினும் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன், கப்தில், முனரோ, ராஸ் டெய்லர் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். இந்திய அணியில் காயம் காரணமாக தவான் இடம்பெறாதது பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும், ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் ஆகியோரின் பேட்டிங் அணிக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது இன்னும் இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ளது. அதற்கு பழித் தீர்க்கும் வகையில் இந்த ஆட்டம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version