வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதை அடுத்து தவானுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். 19 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவான் வெளியேறினார். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களின் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் இணை, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

லோகேஷ் ராகுல் 35 பந்தில் 52 எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 175 ரன்களை இலக்காக கொண்டு வங்காள தேச அணி களமிறங்கியது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த போதும் 3ஆவது விக்கெட்டுக்கு மிதுன் நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெய்ம் அரை சதம் அடித்து அசத்தினார். மிதுன் 27 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ரகீம் டக் அவுட் முறையில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் வங்காள தேச அணி வெற்றி பெரும் என்று இருந்த நிலையில், இந்திய வீரர் துபே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதிரடியாக விளையாடிய நெய்மையும் 81 ரன்களில் அவர் வெளியேற்றியதால், ரசிகர்களுக்கு இருந்த படபடப்பு சற்று குறைய தொடங்கியது. இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காள தேச அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தீபக் சாஹர் பெற்றார்

Exit mobile version