இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் போட்டி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

கிரென் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஹைதராபாத்தில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியாவும், திருவனந்தபுரத்தில் நடந்த 2 வது 20 ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கில் வலுவாக காணப்பட்டாலும், கடந்த இரு போட்டிகளிலும் எளிதான கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டு ஃபீல்டிங்கில் மோசமாக இருந்தது. அதேபோல், முதல் போட்டியில் தோல்வி கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 2வது போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்கையுடன் காணப்படும் அந்த அணி தொடரை கைப்பற்ற, முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம், சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை கைப்பற்ற இந்தியாவும் தீவிரம் காட்டி வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி, இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Exit mobile version