மழையால் கைவிடப்பட்ட இந்தியா-மே.இ.தீவுகள் மோதிய போட்டி

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமான பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் இறங்கிய ஷை ஹோப் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸுடன் இணைத்து நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். லீவிஸ் 40 ரன்களுடனும், ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது.

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்திருந்தது. மழை அதிகரித்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி வரும் 11ம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.

Exit mobile version