இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பதில், ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

3வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். அதே நேரம் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியை பெற போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், சொந்த ஊரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை காண தோனி வரவுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version