முதல் டி20 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், போட்டி நடக்கும் அசாம் மாநிலத்தில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால், மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் பார்வையாளர்களின் செல்போன், பணப் பை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு மற்றும் குடிநீர் உள்ளே வழங்கப்படும் என அசாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்

Exit mobile version