இந்திய அணிக்கு இனி தோனி தேவையில்லை – சேவாக் அதிரடி!

2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனியை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர். ஐ.பி.எல் போட்டிகளில் தோனியின் ஆட்டத்தை காணவெறிகொண்டிருந்த ரசிகர்களுக்கு கொரோனா வைரஸ் முட்டுக்கட்டை போட்டது. அதன் எதிரொலியாக ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவேண்டும் என்பன போன்ற கருத்துகளை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் துவக்க வீரரான சேவாக், அணியில் தோனியின் இருப்பு குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  ‘இந்திய அணி தற்போது வலுவாகவே உள்ளது. அணியில் இடம்பிடித்துள்ள கே.எல்.ராகுல் கடந்த போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்டார். அவரே, தற்போது அணியின் கீப்பராகவும் சிறப்பாக செயல்படுகிறார். ரிஷப் பண்ட், அணிக்கு பேக்-அப் கீப்பராகவும் இருக்கும்பட்சத்தில் தோனியின் தேவை அணிக்கு இருக்காது’ என கூறியுள்ளார். மேலும், இப்போது இருக்கும் அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்படுகிறது, இதில் தோனிக்கான இடம் என்பது சந்தேகத்திற்குரியது எனவும் தெரிவித்தார்.

மேலும், ஹர்த்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமே. அவர் ஆல்ரவுண்டராக அணியில் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணி டி-20 உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இருபது ஓவர் போட்டிகள் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், ஆட்டத்தின் எந்த ஒரு நேரத்திலும் ஒரு வீரர் ஆட்டத்தை மாற்றலாம் என்றும் கருத்து தெரிவித்தார். டி-20 உலககோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 -லிருந்து நவம்பர் 15 வரை நடைபெறுகிறது.

Exit mobile version