இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி!!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளிக்கல்வி துறை கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை தனது துறையின் கீழ் இயங்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது. பொதுவாக பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து துவங்கி இருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி மூலம் தினமும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2400 வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களை தினசரி பாடவாரியாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வீட்டில் இருந்தவாறே
பாடங்களை கற்று வருகின்றனர். ஆசிரியர்கள் நேரடியாக தொலைக்காட்சி முன்தோன்றி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர். செயல்முறை விளக்கங்களையும் அளிக்கின்றனர். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உற்சாகம் ஊட்டக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் வரும் கல்வியாண்டுக்கான முழு பாடங்களையும் கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளில் கல்வி தொலைக்காட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடத்திட்டங்களை வீடியோக்களாக பதிவு செய்யும் பணியை கல்வித் தொலைக்காட்சி செய்து வருகிறது.

மேலும் நீட் மற்றும் ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வருகிறது. இயற்பியல் , வேதியியல் , விலங்கியல், தாவரவியல் , கணிதம் ஆகிய பாடங்களுக்கு தினமும் தலா ஒரு மணி நேரம் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் மிகவும் உதவும்.

கைத்தொழில் பழகு, முப்பரிமாணம் , யாமறிந்த மொழிகளிலே, ஆய்வுக்கூடம், ஜாமெட்ரி பாக்ஸ், பாடுவோம் படிப்போம், உலகம் யாவையும் ஆகிய தலைப்புகளிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த தலைப்புகளில் தமிழ் , ஆங்கிலம் , கணிதம், அறிவியல், சமூக அறிவியல் கணினி அறிவியல், தொழிற்கல்வி ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியாக அட்டவணை போடப்பட்டு காலை 7 மணி முதல் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். கொரானா வைரஸ் தொற்று அச்சம் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்ல முடியாத மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

நியூஸ் ஜே செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பிரேம் நாத் வுடன் செய்தியாளர் தங்கமணி.

Exit mobile version