காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறது : அமைச்சர் ஜெய்சங்கர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் வெளிப்படைத் தன்மையை கடைபிடித்து வருவதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாசெக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக போராட ஒப்புக் கொண்டன. இதனையடுத்து அந்நாட்டு துணை பிரதமர் டைடர் ரெய்ண்டர்ஸை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது. தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் ஆணையர் கிறிஸ்டோஸ் ஸ்டைலானைட்ஸ் சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவின் நிலையை எடுத்துரைத்தார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் வெளிப்படைத் தன்மையை கடைபிடித்து வருவதாக கூறிய அவர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.

Exit mobile version