மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டி: இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 18 ரன்களிலும், அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 48 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 46 ரன்களும் எடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய தோனி 56 ரன்கள் எடுத்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில், இந்தியா7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஷை ஹோப் 5 ரன்னிலும் சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னிலும் நிகோலஸ் பூரன் 28 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கவே அந்த அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது சமி 4 விக்கெட்டுகளும் பும்ரா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Exit mobile version