கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் நிலவிய உறைபனியின் தாக்கத்தால் வறட்சி நிலவியது. கோடை சீசன் துவங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணைகளில் நீரின் அளவு குறையத் துவங்கியது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீரின் அளவு சற்றே உயர்ந்தது. அணைகளில் நீரின் அளவு அதிகரித்ததால், மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.