சென்னை, கே.கே. நகரில் பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 900 ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பாஸ்கரன், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.