பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

பெரியாறு அணையில் இருந்து பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களிலும், பதினெட்டாம் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்று, அக்டோபர் 18 முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேனி, உத்தமபாளையம் வட்டங்களில் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பெரியாறு அணையிலிருந்து 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்ததை ஏற்று, அக்டோபர் 18 முதல் 30 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உயர் விளைச்சல் பெற வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version