நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட அரசு மருத்துவர் மாயம்

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய தேனியை சேர்ந்த அரசு மருத்துவர், மீண்டும் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வடகரையை சேர்ந்த மனோஜ்குமார் தேவாரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது சகோதரியின் மகளுடன் கடந்த ஆண்டு, பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் பார்க்கச் சென்ற உறவினர்களை, ஆசிரம ஊழியர்கள் விரட்டியடித்ததாக தெரிகிறது. இது குறித்து மனோஜின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், கர்நாடக காவல்துறையின் உதவியுடன் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்த மருத்துவர் மனோஜ் மற்றும் அவரது சகோதரி மகள் இருவரும் மீட்கப்பட்டனர். சொந்த ஊருக்கு திரும்பிய மனோஜ்குமார், சில நாட்களில் மீண்டும் மாயமாகி உள்ளார். இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர், நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு மனோஜ் சென்று விட்டாரா என்ற சந்தேகத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version