திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில். ப. சிதம்பரத்திடம் இன்றும், நாளையும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற ப. சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவினர் கைது செய்ததால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரிய ப.சிதம்பரத்தின் மனு வரும் 27-ந் தேதி உச்சநீதிமன்றதில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சில ஆவணங்களை காட்டி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றதில், நீதிபதி அஜய் குமார் குஹரிடம் அமலாக்கப்பிரிவு சார்பில் கோரப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டதையடுத்து, இன்று காலை திகார் சிறைக்கு சென்று, ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

Exit mobile version