குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தியா தொடுத்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

குல்பூஷண் ஜாதவை கடந்த 2016-ஆம் ஆண்டில் கைது செய்த பாகிஸ்தான், இந்தியாவின் ரா அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து அவர் சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதாகவும், தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் வரையில், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கல் தரப்பு வாதங்களை முன் வைத்தன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நீதிபதி அப்துல்லாவி அகமது யூசப் தீர்ப்பை வெளியிடவுள்ளார். தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக ஏற்கனவே பாகிஸ்தான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version