பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை

பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக வரும் 5ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் அறுவடைக்குப் பின் வைக்கோலை விவசாயிகள் தீவைத்து எரித்து வருகின்றனர். இதனால் மூண்டெழும் புகையாலும், தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவற்றாலும் டெல்லியில் மிகக் கடுமையான அளவுக்குக் காற்று மாசுபட்டுள்ளது. நலவாழ்வுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையால் மாணவர்களின் நலன்கருதி வரும் 5ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனிடையே, அரசு அலுவலகங்களுக்கான அலுவலக நேரத்தையும் டெல்லி அரசு மாற்றியமைத்துள்ளது. வரும் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதில், 21 துறைகள் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், மற்ற 21 துறைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version