மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மகாராஷ்டிரத்தில் அரசு அமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில், ஆளுநரின் பரிந்துரையை அடுத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையைப் பெற்றன. முதல் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தியதாலும், அதை பாஜக ஏற்காததாலும் அந்தக் கூட்டணி முறிந்து போனது.

இந்நிலையில் 105 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் முதலில் அழைப்பு விடுத்தார். இரண்டு நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கெடுவும் விதித்தார். பெரும்பான்மைக்கான ஆதரவைத் திரட்ட இயலாத நிலையில் தங்களால் ஆட்சியமைக்க இயலாது என ஆளுநரிடம் பாஜக தெரிவித்துவிட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தும் குறித்த காலக்கெடுவுக்குள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதற்கான கடிதத்தை சிவசேனாவால் அளிக்க இயலவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரைத்தார். இதுபற்றிப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநரின் பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.

Exit mobile version